மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி பறிப்பு - அரசு செய்தி வெளியிட்டுள்ளது59541485


மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி பறிப்பு - அரசு செய்தி வெளியிட்டுள்ளது


மோசடி வழக்கில் சிக்கியதுடன், 50 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதால், மூத்த தலைவர் பார்த்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் நியமன மோசடி வழக்கில், மாநில கல்வி அமைச்சராக இருந்த தொழில் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடைய நெருங்கிய கூட்டாளியும், தோழியுமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் இருந்து, ஏற்கனவே 21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.


நேற்று முன்தினம் மேலும், 29 கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், பல சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, திரிணமுல் காங்.,குக்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., வலியுறுத்தி வந்தது. ஆனால், மூத்த தலைவரும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவருமான பார்த்தா சட்டர்ஜி பதவியில் இருந்து விலக மறுத்து வந்தார்.


இந்நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி, திரிணமுல் காங்., மூத்த தலைவர்களும் வலியுறுத்தினர். கட்சியின் மேற்கு வங்க பொதுச் செயலர் குணால் கோஷ் கூறியுள்ளதாவது: பார்த்தா சட்டர்ஜியால், கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரும் அவமரியாதை ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு பாதிக்கப்பட்டுள்ளது.பார்த்தா சட்டர்ஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக, மேற்கு வங்க அரசு செய்தி வெளியிட்டுள்ளது.அவரிடம் இருந்த துறைகளை, தான் கவனிக்க உள்ளதாக, நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். இதற்கிடையே, பார்த்தா சட்டர்ஜி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

 

Comments

Popular posts from this blog

What No One Tells You About Switching to Natural Deodorant